நல்லூர் 17ம் திருவிழா – 13.08.2017
August 13, 2017
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – 14.08.2017
August 15, 2017

நல்லூர் ஸ்ரீ சண்முக தீர்த்தப் பிரதிஷ்டை – 2017

1917 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4 ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் பெருமானுக்கான தீர்த்தக் கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்த கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளதுடன், சண்முக தீர்த்தக்கேணி பிரதிஷ்டா கும்பாபிஷேகம் எதிர்வரும் கார்த்திகை உற்சவ தினத்தன்று (15.08.2017 செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயிலுக்கான ஷண்முக தீர்த்தகேணியை உருவாக்கும் எண்ணம் 4 ஆவது இரகுநாத மாப்பாண முதலியாருக்கு 1917 ஆம் ஆண்டு ஏற்பட்டதுடன், தற்போது அச்சிந்தனையின் நூறாவது (100 ஆவது) வருடத்தில் புதிய திருக்கேணித் திருப்பணி நிறைவு பெற்று தீர்த்த பிரதிஷ்டை இடம்பெறவுள்ளது.

 

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்துக்கே உரித்தானது. இவ்வருடத் திருவிழாவானது (2017 ஆம் ஆண்டு) மாப்பாண முதலியார் குடும்பத்தினரின் 283 ஆவது நிர்வாக வருடமாகும். தற்போது மாப்பாண முதலியார் குடும்பத்தின் பரம்பரையில் வந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார் கோயில் 10 ஆவது அதிகாரியாக நல்லூர் கந்தனுக்கு தன் சேவைகளை செய்து வருகிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்பவர்களுடைய வழிகாட்டலின் கீழ் அடுத்த சந்ததியைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவது வழமையாகும். தந்தை, மகன் மற்றும் பேரன் என வழி வழியாக முருகனுக்கான சேவையை வழங்கும் பொருட்டு, அவர்கள் சிறுவயது முதலே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

 

சிறு வயது முதல் கிடைத்த தந்தையின் வழிகாட்டல் வளர்ந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், வெளியாட்களுடான தொடர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனக்கும் முருகனுக்கும் இடையிலான உறவை பிரபலப்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர். முருகனுக்குக் கிடைக்கும் ஒரு சதமேனும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, முருகன் குடியிருக்கும் கோயில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது காலத்தில் நல்லூர்க் கோயில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றதுடன், மாப்பாணர் கட்டடப்பாணி என்னும் பெயர் நல்லூருக்குக் கிடைக்கக் காரணமாக விளங்கியவர். அதுமாத்திரமல்லாமல் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரி எனக் குறிப்பிடும் வகையில் கிட்டத்தட்ட ஜம்பது வருடங்களுக்கு மேலாக முருகனுக்குத் தொண்டாற்றி வருபவர்.

 

தற்போதைய கோயில் அதிகாரியான குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற குமாரதாஸ் மாப்பாண முதலியார், மிகவும் குறுகிய காலப்பகுதியில் அதாவது 6 – 7 மாதத்தில் பழைய வசந்த மண்டபத்தின் வாசலைப் பெரிதாக்கினார். ஒவ்வொரு வருடமும் கொடியேற்றத்திற்கு முன்னர் ஏதாவது ஒரு கோயில் திருப்பணி மேற்கொள்ளும் நடைமுறை அக்காலப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்தப் பாரம்பரியம் இன்றும் நல்லூர்க் கோயிலில் தொடர்வது முருகனின் அருளே.

 

குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் வெள்ளைக்கல் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கு மாத்திரமே நிறைவு செய்யப்பட்டன. தந்தையார் ஆரம்பித்திருந்த வெள்ளைக்கல் கோபுரத்திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் பூர்த்தி செய்தார். அத்துடன் முருகனின் மனைவியரான வள்ளி – தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியையும் நிறைவு செய்தார். தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை 1966 ஆம் ஆண்டு குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவு செய்தார்.

 

தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கோயில் அமைப்பு ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்பட்டாலும், மூலஸ்தானத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தாமல், அதைச்சுற்றியுள்ள பழைய மண்டபங்கள் அனைத்தும் புதிதாக்கப்பட்டன. ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு திருப்பணியை ஆரம்பித்து, அதை அடுத்த திருவிழாவிற்கு முன்னர் நிறைவேற்றும் வழக்கம் உருவானது. இவ்வளர்ச்சிப் படிமுறைகளில் மகா மண்டபம், ருத்திர மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. சண்முகப் பெருமானுக்கு சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜரைப் போன்று, ஒரு சபை அமைக்கப்பட்டது. ருத்திர மண்டபத் திருப்பணியின் போது, சிறிய கோயிலில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமிக்கு, விமானத்துடன் கூடிய கோயில் அமைத்துத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. அதாவது வெளி மண்டபத்தை சொக்கட்டான் பந்தல் முறையில் அமைத்து கோயில் அழகுபடுத்தப்பட்டது.

 

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு திருப்பணிகளும் முருகன் அருளால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுற்றன. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு கோயிலுக்கான தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. ஈடுஇணையற்ற முறையில் அமைக்கப்பட்ட, அழகுப் பொக்கிஷமான தேரில் கந்தசுவாமியார் காலங்காலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுக்கப் போகிறார் என எண்ணிய காரணத்தால், குறித்த தேரை நீண்ட காலம் பாதுகாக்கும் பொருட்டு தேர்முட்டியை குமாரதாஸ் மாப்பாண முதலியார் அமைத்தார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தேரும் மஞ்சமும் இலங்கையின் இருபெரும் கலைப்பொக்கிஷங்கள் ஆகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டபத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.

 

குறித்த தேர் மண்டபத்தின் கட்டடக்கலை அமைப்பானது, நல்லூர்க் கோயில் அமைப்பிற்கும் சொக்கட்டான் பந்தல் அமைப்பிற்கும் பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது. நல்லூரில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருப்பணியையும் மூடிக்கட்டும் வழக்கம் கிடையாது. அனைத்து வேலைகளையும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் அதேவேளை, அவற்றை பக்தர்களும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நல்லூரில் பின்பற்றப்படுகின்றது. கட்டடக்கலை வரைபடங்களுக்கு அப்பால் சென்று, கோயில் வளாகத்திலும் முருகன் முன்னிலையிலும் திருப்பணிகளுக்கான முக்கிய முடிவுகளை கோயில் அதிகாரிகள் எடுக்கும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கம் உலகில் உள்ள எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் என்பதுடன், முக்கிய முடிவுகளை முருகனே எடுப்பார் என்பது ஜதீகமாகும்.

 

கோயில் திருப்பணிகளைக் கோயில் வளாகத்தில் வைத்து நிறைவேற்றுவதை எப்பொழுதும் கோயில் நிர்வாகத்தினர் ஊக்கப்படுத்துபவர்கள். திருப்பணியின் போது பணியாட்கள் பணத்தை மாத்திரம் இலக்கு வைக்காமல், பக்தியை முதன்மைப்படுத்தும் பொருட்டும், கோயில் வளர்ச்சியின் பொருட்டும் வேலைக் கட்டுப்பாடு மற்றும் உடைக்கட்டுப்பாடு என்பவற்றில் சில விதிமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்கள். ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் திருப்பணியின் பொருட்டு முருகனை பக்தியுடன் நினைந்துருகிக் கொடுக்கும் பணத்துக்கும் பொருட்களுக்கும், அடுத்த கணம் முருகப் பெருமான் அதிபதியாகிறான். தனக்குத் தேவைப்படுகின்ற திருப்பணிகளை வருடா வருடம் நிறைவேற்றும் சர்வ வல்லமை நிரம்பியவன் நல்லூர்க் கந்தன். அதனால்தான் அவன் ஆலயத்திற்கு பெருங்கோயில் என்னும் சிறப்புக் கிடைக்கின்றது.

 

பக்தர்கள் பக்தியால் உருகி, முருகனுக்கு நேர்த்தி வைத்துக் கொடுக்கும் ஒரு பொட்டுத் தங்கமும் ஒன்று சேர்க்கப்பட்டு, முருகப் பெருமானுக்கான புதியதோர் நகையாக மாற்றம் பெற்று, அழகனை அலங்கரிக்கும் சிறப்பு நல்லூருக்கு மாத்திரம் உரித்தானது. வருடா வருடம் நடைபெறும் மகோற்சவ காலங்களில் புதிய அழகான நகையுடன் அலங்காரக் கந்தனாக தேருக்கு எழுந்தருளும் அவன் அழகைக் காணும் போது, கொடுத்தவனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் கண்கள் பனித்து, உள்ளம் உருகும்.

 

வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், தையல்காரர், கொல்லாசாரியார் என அனைவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தயாராகத் தொடங்குவார்கள். நல்லூரில் உற்சவங்கள் அனைத்தும் கண்ணைக் கவரும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றாலும், திருவிழாக்களுக்கும் அபிடேகங்களுக்கும் குறைந்த அளவான கட்டணமே உபயகாரர்களிடம் இருந்து பெறப்படுகிறது. ஆயினும் அனைத்துத் திருவிழாக்களும் எவ்வித வேறுபாடுமின்றி நடைபெறுவது நல்லூரின் அழகு. கோடீஸ்வரர் செய்யும் திருவிழாக்களுக்கும் ஏழை செய்யும் திருவிழாக்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை. பாரம்பரியமும் பழைமையும் மாறாமல் உபயகாரர்களுக்கு திருவிழாக்கள் வழங்கப்பட்டாலும், அவற்றை முற்றுமுழுதாக கோயிலே பொறுப்பேற்று நடத்துவது நல்லூருக்கு மட்டும் உரித்தான சிறப்பு.

 

நல்லூர் கோயில் நடைமுறைகளை மிகவும் உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு விடயம் மிகவும் தெளிவாகப் புரியும். நல்லூரில் கோடி கோடியாகப் பணம் குவிவது இல்லை. கோயிலில் திருப்பணி உண்டியல் மற்றும் வெளிமண்டப உண்டியல் என இரண்டு உண்டியல்கள் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளமையும் இங்குள்ள இன்னுமொரு சிறப்பாகும். ஆகவே ஒரு ரூபா அர்ச்சனையில் இத்தனை பிரமாண்டமான திருப்பணிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் நடைபெறுவதற்கு இன்றைய காலகட்டத்தில் சாத்தியமாகுமா? என்ற கேள்விக்கு முருகன் மட்டுமே பதில் அறிவான்.

 

நல்லூரானை மனதால் நெருங்குவதற்கு ஒரு செங்கல்லோ அல்லது ஒரு ரூபா அர்ச்சனையோ போதுமானது. கோயில் வளாகத்தில் அமைந்திருந்த வணிக நிலையங்ளையும் வியாபார நிறுவனங்களையும் 1980 களில் அகற்றி, நல்லூரைச் சுற்றி மிகவும் பிரமாண்ட மணற்பரப்பு வெளி உருவாக்கப்பட்டது. பின்னர் வந்த காலப்பகுதியில் கோயில் உள்வீதி சிறிது சிறிதாகப் பெருப்பிக்கப்பட்டது. அத்திருப்பணிகளின் போது உள்வீதியின் அமைப்பானது, கோயிலின் ஏனைய கட்டடங்களுக்கும் மண்டபங்களுக்கும் ஒத்துப்போகும் வகையில் உருவாக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் இருந்து நேரெதிரில் வெளிவீதியை நோக்கியதாக கோயிலுக்கான வாசல் ஒன்று அமைக்கப்பட்டது. யுத்த காலத்தில் ஏற்பட்ட சீமெந்துத் தட்டுப்பாட்டின்போதும் திருப்பணிகள் நடந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

1984 ஆம் ஆண்டு அரசு வீதியின் காணிக்குப் பதிலாக கேணித்திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாறியது. 2008 ஆம் ஆண்டு சுற்றுக் கோயில்களுக்கு தனித் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டதுடன், சபைகள் அமைக்கப்பட்டு, கோயில்கள் உலோகத் தகட்டால் வேய்ந்து திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 2008 ஆம் ஆண்டு சண்முகருக்கான இராஜகோபுரத் திருப்பணி நவதானியம் இடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2011 ஆம் ஆண்டு இந்திய பேரரசர்கள் கட்டிய பெருந்திருப்பணிக்கு ஒப்பான நல்லூர் இராஜகோபுரக் குடமுழுக்கு இடம்பெற்றது. முருகன் பார்வை நல்லவற்றில் முடிய வேண்டும் என்பதற்காக சண்முகருக்கு எதிரில் அமைந்திருந்த கோயில் பூந்தோட்டத்தில் அருணகிரிநாதர் ஸ்தாபிக்கப்பட்டார். தெற்கில் அமைக்கப்பட்ட கோபுரத்தை சமநிலைப்படுத்தும் பொருட்டு வடக்கில் ஒரு கோபுரம் கட்டப்பட்டு, திருப்பணி நிறைவேற்றப்பட்டது.

 

நன்றி  – உமாச்சந்திரா பிரகாஷ்